பதிவு செய்த நாள்
25
ஜூன்
2024
10:06
மேட்டுப்பாளையம்; வேண்டிய வரம் தரும் பெருமாளுக்கு, வேண்டுதலை நிறைவேற்ற, பக்தர்கள் வேல் அடித்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். காரமடை அருகே கெம்மாரம்பாளையம் ஊராட்சியில், இருளர்பதி கிராமத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. சுயம்பு வடிவிலான ரங்கநாத பெருமாளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை, இக்கோவிலில் திருவிழா நடைபெறும். இக்கோவிலுக்கு கெம்மாரம்பாளையம், கண்டியூர், சாலை வேம்பு, வெள்ளியங்காடு, முத்துக்கல்லூர், ஆதிமாதையனூர், மேடூர் ஆகிய சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த, பக்தர்கள் ஏராளமானவர்கள், கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். பொதுவாக அம்மன், முருகர், கருப்பராயன் ஆகிய கோவில்களில் தான், வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள், வேல் அடித்து வைப்பது வழக்கம். ஆனால் சற்று வித்தியாசமாக பெருமாள் கோவிலில், வேண்டுதலை நிறைவேற்ற, வேல் அடித்து வைப்பது இப்பகுதியில் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. பெருமாள் சுவாமியிடம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், வேல்களை அடித்து வேண்டுதலை நிறைவேற்றி நேர்த்திக் கடனை செலுத்தி, வருகின்றனர்.