திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சுவாமியர் தேர்கள் நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க, பாதுகாப்பு கம்பி தடுப்பு அமைக்கப்பட்டது.
திருக்கழுக்குன்றத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலின் பஞ்சமூர்த்தி சுவாமியர் தேர்கள், பக்தவச்சலேஸ்வரர் கோவில், சதுரங்கப்பட்டினம் சாலை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவில் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு வருவோரின் இருசக்கர வாகனங்கள், இத்தேர்களை ஒட்டியே நிறுத்தப்படுகின்றன. அவற்றை நிறுத்தும்போதும், மீண்டும் வெளியே எடுக்கும்போதும், தேர்களை மூடியுள்ள தகடுகள் சேதமடைகின்றன. எரிபொருள் கசிவால் தேருக்கும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, தேருக்கு அருகில் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து பாதிப்பை தவிர்க்க, தற்போது கம்பி தடுப்பு அமைக்கப்பட்டது.