பதிவு செய்த நாள்
25
ஜூன்
2024
03:06
விஜயநகரா மாவட்டம், ஹூவினஹடகளியில் துங்கபத்ரா ஆற்றின் அருகில் மைலாரா கிராமத்தில் மைலாரா லிங்கேஸ்வரா கோவில் உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையான கோவில் என்று கூறப்படுகிறது.
சிவன் - பார்வதி வீற்றிருப்பதால், இக்கோவிலை மைலாரா லிங்கேஸ்வரா -- கங்காலம்மா கோவில் என பக்தர்கள் அழைக்கின்றனர். இக்கோவிலில் விஷ்ணு, துப்பட்டலம்மா, வீரபத்ரரும் வீற்றிருக்கின்றனர். ஏழு கோடி கடவுள்களையும், தன்னுள் இணைத்து கொண்டார் என்று நம்பப்படுகிறது.
கேட்கும் வரம்; புராணங்களின்படி, மல்லாசுரா, மணிகாசுரா சகோதர அரக்கர்கள், பிரம்மனை வேண்டி தவம் செய்தனர். இவர்களின் தவத்தால் பரவசமடைந்த பிரம்மர், அவர்கள் கேட்கும் வரம் தருவதாக உறுதி அளித்தார். மனிதர்கள் யாராலும் எங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என, அவர்கள் வரம் பெற்றனர். அவரும் வரத்தை அளித்தார். இதனால் உற்சாகமடைந்த சகோதரர்கள், முனிவர்கள், மனிதர்களை படாதபாடுபடுத்தினர். மனம் வருந்திய முனிவர்கள், சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் மைலாரா எனும் குதிரையில் வாள், வில் அம்புடன் மார்த்தாண்ட பைரவர் அவதாரம் எடுத்து, ஏழு கோடி கோரவர்களுடன் சேர்ந்து, அரக்க சகோதரர்களுடன் போரிட்டார். பத்து நாட்கள் நடந்த இந்த போரில், சிவனுக்கு உறுதுணையாக இருந்த வீரபத்ரர், தனது நீண்ட கூந்தலால், பூமியை பிளந்து, அதில் இருந்து காஞ்சீவர்களை வரவழைத்தார். அவர்கள் உதவியுடன், அரக்கர்களை பிடித்து, சிவனிடம் ஒப்படைத்தனர். அவர்களை வதம் செய்து, முனிவர்களை காப்பாற்றினார். அவர்களை கொன்ற பின், அவர்களின் குடலை தலைப்பாகையாகவும், பற்களை மாலையாகவும் மண்டை ஓடுகளை உணவு கிண்ணமாகவும், வாய், கைகளை டிரம்சாகவும், அவர்களின் தோலை, நீண்ட துணியாகவும் அணிந்து கொண்டார். அவர்களின் கொழுப்பை எண்ணெயாகவும், நரம்புகளை விளக்கு திரியாகவும் பயன்படுத்தினார்.
திருவிழா: ஆண்டுதோறும் பிப்ரவரியில், 12 நாட்கள் கார்னிகா உற்சவம் நடக்கும். இதற்காக கோவில் அர்ச்சகராக இருப்பவர், 12 நாட்கள் விரதம் இருந்து, நிறைவுநாளில் குறி சொல்வார். அவர் கூறுவது இதுவரை நடந்து வந்துள்ளது. இதை கேட்பதற்காகவே, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.
எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து பல்லாரி பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். விமானத்தில் செல்வோர், ஹூப்பள்ளியில் இறங்க வேண்டும். அங்கிருந்து கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் அல்லது டாக்சி மூலம் அங்கு செல்லலாம். ரயிலில் செல்வோர், ராணிபென்னுார் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து பஸ் அல்லது டாக்சியில் கோவிலுக்குச் செல்லலாம்.