பதிவு செய்த நாள்
04
ஜூலை
2024
03:07
சென்னை; திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி, சப்தரிஷி ஈஸ்வரர் கோவில், நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியத்தில் உள்ள கொப்பம்பட்டியில், பழமையான சப்தரிஷி ஈஸ்வரர் – குங்குமவல்லி அம்மன் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவிலில் உள்ள கல்வெட்டுகளை, சுவடி திட்டப் பணி பொறுப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை பேராசிரியருமான தாமரை பாண்டியன் தலைமையில், ஆய்வாளர்கள் பதிவு செய்தனர். அதில், 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாயக்கர் ஆட்சி காலத்தில், இந்த கோவில் பூஜைக்கும், புனரமைப்புக்கும் நில தானம் செய்தது தொடர்பான கல்வெட்டு, மூன்று இடங்களில் இருந்ததை கண்டறிந்தனர்.
இதுகுறித்து, தாமரை பாண்டியன் கூறியதாவது: இந்த கோவிலில் உள்ள சுவடிகளை சேகரித்து பதிப்பிக்கும் பணிக்காக ஆய்வு செய்தோம். அதில், ‘கொப்பமாபுரித் திருவூடல்’ எனும், பழைய இலக்கிய சுவடி கிடைத்தது; அதை பதிப்பிக்க உள்ளோம். மேலும், கோவிலின் வரலாறு குறித்த தேடலுக்காக கோவிலின் சுற்றுச்சுவரை ஆய்வு செய்தபோது, கருவறையின் வெளிப்புற வலப்பக்கத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கல்வெட்டு இருந்தது. அதே கல்வெட்டு செய்தியை, கோவில் நுழைவாயிலின் தெற்கு பகுதி, தளிகை ஆற்றின் கிழக்குப் பகுதிகளிலும், கல்வெட்டாக இருந்ததை கண்டறிந்தோம்.
நிலதானம்: விஜயநகர பேரரசின் மதுரை ஆட்சிப் பகுதியின் மனுகுண்டி நகரில் வாழ்ந்த வேமரெட்டி வம்சத்தினர், திருச்சியின் துறையூர் பகுதியில் ஜமீன்தாரராக குடியேறி, ‘விஜய வெங்கிடாசலபதி’ என பட்டம் சூட்டிக்கொண்டு, அப்பகுதியின் நிர்வாகத்தில் ஈடுபட்டனர். அந்த பரம்பரையில், வல்லக்கோல் எர்ரம ரெட்டியாரின் மகன் நல்லப்ப ரெட்டியார் என்பவர், பாழடைந்திருந்த இந்த கோவிலையும் இன்னும் சில கோவில்களையும் புதுப்பித்து, பூஜைக்காக நிலதானத்தையும் வழங்கினார். துறையூர் சிவை, மூலைபத்து கொப்புமாபுரி சப்தரிஷி ஈஸ்வரர் கோவிலின் புனரமைப்பு மற்றும் நைவேத்தியம் செய்வதற்காக, 1718ல் வைகாசி மாதம் 13ம் தேதி, எர்ரம ரெட்டியின் மகனும், வல்லக்கோல் நல்லப்ப ரெட்டியின் பேரனுமான நல்லப்ப ரெட்டி, நிலதானம் செய்துள்ளார்.
தான நிலம் எது?; காரப்புடையாம்பட்டி எல்லைக்கு வடக்கு, தளிகை ஆற்றுக்கு கிழக்கு, நாகய நெல்லுார் தலைக்கு தெற்கு; தம்மம்பட்டி வகைக்கு மேற்கு எல்லைகளுக்கு உட்பட்ட மரங்கள், கால்நடை அடைக்கும் பட்டி, தென்னந்தோப்பு, புளியந்தோப்பு, கிராமத்தின் வரி வருவாய் ஆகியவை, இனி சப்தரிஷி ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தம். அத்துடன், அங்குள்ள ஆறு, தென்னந்தோப்புக்கு கிழக்கில் உள்ள 6 சென்ட் நஞ்செய் நிலமும் தானமாக, எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.