பதிவு செய்த நாள்
05
ஜூலை
2024
11:07
மேட்டுப்பாளையம்; உலக நன்மைக்காக அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடந்த ஒன்பதாம் ஆண்டு விழாவில் லட்சார்ச்சனை செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம்அருகே பெள்ளாதி ஊராட்சி சின்னத்தொட்டிபாளையத்தில் அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டும், உலக நன்மைக்காகவும், கோவிலில் மூலமந்திர ஹோமவிதாந லட்சார்ச்சனை நடந்தது. கடந்த இரண்டாம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மூன்றாம் தேதி சின்னதொட்டிபாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, மேளதாளத்துடன் தீர்த்த குடங்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். நேற்று காலை விநாயகர் வழிபாடு, கோ பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம் பூஜை, கலசாபிஷேகம் ஆகிய பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து லட்சார்ச்சனை துவங்கியது. சிவகிரி கண்ணன் சுவாமியின் தலைமையில், 15 அர்ச்சகர்கள் லட்சார்ச்சனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை மூல மந்திர மகா யாகமும், கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து சின்னதொட்டிபாளையம், சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சீர்வரிசை தட்டுகளை கோவிலுக்குச் கொண்டு வர உள்ளனர். மதியம் 12:15 மணிக்கு நஞ்சுண்டேஸ்வரருக்கும், அமிர்தவர்ஷினிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.