திருவாலங்காடு; திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான ஆற்காடு குப்பம் சோளீஸ்வரர் கோவிலின் திருக்குளத்தின் படிகள், சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. இக்கோவில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில் குளம் குபேரன் வழிபட்ட தலம் என்பது வரலாறு. அதேபோல், காஞ்சி மகா பெரியவர் சந்தியாவதனம் செய்த இடமாகும். இந்த கோவில் குளத்தில் நீராடி சுவாமியை வழிபட்டால், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம். எனவே, இக்கோவிலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நான்கு ஆண்டுகளாக கோவில் குளத்தின் படிக்கட்டுகள் மற்றும் சுற்றுச்சுவர் உடைந்துள்ளதால், பக்தர்கள் நீராட முடியாமல் திரும்பி செல்கின்றனர். எனவே, சோளீஸ்வரர் கோவில் குளத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.