மாலக்கோயிலில் கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2024 11:07
திருமங்கலம்; மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரவாற்றுத்துறை மாணவர்கள் தர்மராஜா, முரளிதரன் கள்ளிக்குடி உன்னிப்பட்டி மாலக்கோயிலில் கல்வெட்டுடன் கூடிய நடுகல் இருப்பதாக தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து உதவி பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், மாரீஸ்வரன் தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் நடுகல்லை ஆய்வு செய்தனர். இது நாயக்கர் காலத்து நடுக்கல் என்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் கூறியதாவது, மாலக்கோயிலில் இடம் பெற்றுள்ள நடுகல்லானது 3 உயரமும் 2 அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வணங்கிய நிலையில் ஒருவர் நின்றபடியான சிலை உள்ளது. அதில் இடதுபுறம் 11 வரிகள் கொண்ட தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நள வருடம் வைகாசி மாதம் 27ம் நாள் குல்லம்பட்டியை சேர்ந்த அச்சுப்பநாயக்கர் மகன் மாரிநாயாக்கர் சுப்பநாயக்கரின் கல் என எழுதப்பட்டுள்ளது. இக்கல் எழுத்தில் அச்சுப்ப நாயக்கர் மகன் மாரிநாயக்கசுப்ப நாயக்கர் இறந்த நிகழ்வை நடுகல் வைத்து குறிப்பிட்டுள்ளனர் என தெரியவருகிறது. மேலும் இதில் இரண்டு பெண் நடுகற்கள் காணப்படுகின்றன. அவற்றில் இடம்பெறும் பெண்கள் நன்கு ஆடை ஆபரணங்களுடன் இரு கரம் கூப்பி வணங்கியபடி நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த பெண்கள் கணவர் இறந்த பினபு உயிர் துறந்து இருக்கலாம் என்பதும் தெரியவருகிறது. மற்றொரு நடுகல்லில் வீரன் ஒருவன் வணங்கிய நிலையில் இடம் பெறுகின்றனர் மேலும் இங்கு சிற்பங்கள், கல்வெட்டுகள் என மொத்தமாக எட்டு நடுகற்கள் காணப்படுகின்றன சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து 17 அல்லது 18 நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு நடுகற்களாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த சிற்ப குவியலை வைத்து பார்க்கும்பொழுது வீரத்தில் சிறந்தவருக்கும், ஒழுக்கத்தில் சிறந்து விளங்குபவர்களும் நடுகல் வைத்து வழிபடும் வழக்கம் இந்த பகுதியில் இருந்துள்ளது தெளிவாகிறது என்றனர்.