பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
12:07
திருவள்ளூர்; திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் அமைந்துஉள்ளது, 600 ஆண்டுகள் பழமையான வீர ஆஞ்சநேய சுவாமி கோவில். இங்கு கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு கணபதி பூஜையும், சங்கல்பமும் கலச பூஜையும், யாகசாலை பிரவேசமும் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை யாகசாலை பூஜையும், பூர்ணாஹூதியும், தீபாராதனையும், வீர ஆஞ்சநேய சுவாமிக்கு சன்னிதான கலசாபிஷேகமும் நடந்தது. காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து சன்னிதானத்தில் பஞ்சாம்ருத அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை ரதோத்ஸ்வம், பஜனை, திபாராதனை நடந்தது. திருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
சேமாத்தம்மன் கோவில்; கடம்பத்துார் ஒன்றியம் வயலுார் ஊராட்சியில் அமைந்துள்ளது சேமாத்தம்மன் கோவில், மந்தைவெளியம்மன் கோவில், விக்ன விநாயகர் கோவில். இந்த மூன்று கோவில்களிலும் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் 6ம் தேதி விக்னேஷ்வர, லட்சுமி, கோமாதா பூஜையும், மகா கணபதி ஹோமமும் நடந்தது . கும்பாபிஷேக நாளான நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மூலமந்திர ஹோமமும், மகா பூர்ணாஹூதியும் நடந்தது. காலை 9:30 மணி முதல் 10:15 மணிக்குள் சேமாத்தம்மன், விக்ன விநாயகர், மந்தைவெளி அம்மன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து விசேஷ அபிஷேகம் ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.