பதிவு செய்த நாள்
09
ஜூலை
2024
12:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும், ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான உற்சவம் நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சப்பரத்தில் அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார். இரவு, சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் உலா வந்தனர். இரண்டாம் நாள் உற்சவமான நேற்று காலை சூரிய பிரபை உற்சவம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட சூரிய பிரபையில், மருகுவார்குழலி அம்பிகையுடன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார். நான்காம் நாள் உற்சவமான நாளை, காலை நாக வாகனமும், இரவு ரிஷப வாகன உற்சவமும் நடைபெறுகிறது. வரும் 11ம் தேதி காலை, அதிகார நந்தி உற்சவமும், இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 13ம் தேதி காலை தேரோட்டமும் நடைபெறுகிறது.