மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு காவடி சுமந்து வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2024 12:07
திருப்புவனம்; ஆடி இரண்டாவது வெள்ளி கிழமையை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தேவகோட்டையைச் சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து வந்து அம்மனை தரிசனம்செய்தனர். ஆடி வெள்ளி கிழமைகளில் அம்மன் கோயில்களில் பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதும், அதிலும் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை நாளில் அம்மனை தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அதிகாலை முதலே வருகை தந்தனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உச்சி கால பூஜை விநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கி அடைக்கலம் காத்த அய்யனார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்த பின் மதியம் 1:00மணிக்கு அம்மனுக்கு ஐந்து வித தீபாராதனை காட்டப்பட்டது. உச்சி கால பூஜையில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்திருந்தனர். தீபாராதனை காட்டப்பட்ட பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே தரிசன டிக்கட் வழங்கப்பட்டதுடன் வளாகத்தில் குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதிகாலை முதலே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன், எஸ்.ஐ.,மோகன்தாஸ் தலைமையில் போலீசார் வாகனங்களை ஒழுங்கு படுத்தினர். இதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்களும், தரிசனம் முடிந்து வெளியேறிய பக்தர்களும் சிரமமின்றி வந்துசென்றனர். அம்மனுக்கு பக்தர்கள் பட்டுச்சேலை,எலுமிச்சை மாலை அணிவித்து தரிசனம் செய்து சென்றனர்.