பதிவு செய்த நாள்
30
ஜூலை
2024
10:07
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆடிக் குண்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிக் குண்டம் விழா, 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றமும் நடந்தது. திங்கள் கிழமை பொங்கல் வைத்து, குண்டம் திறக்கப்பட்டது. இன்று அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், அதை தொடர்ந்து காலை, 5:45 மணிக்கு குண்டம் இறங்கும் வைபவம் நடந்தது. பூசாரி ஹரி குண்டத்திற்கு பூஜை செய்து, பூப்பந்து உருட்டி விட்டு முதலில் குண்டம் இறங்கினார். அதைத் தொடர்ந்து உதவி பூசாரிகள் குண்டம் இறங்கினர். இரவு முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். வெளியூரிலிருந்து வந்த பக்தர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை, திருப்பூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கியது. ஏ.டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில், 3 டி.எஸ்.பி.,கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என, 500க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, ஆற்றில் குளிக்க வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இருந்த போதும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு, போட் ஆகியவற்றை வைத்து, பவானி ஆற்றின் கரையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை, மருத்துவ குழுவினர் கோவில் வளாகத்தில், மருத்துவ முகாம் அமைத்து, உடல்நலம் பாதித்தவர்களுக்கும், தீ மிதித்து காயம் அடைந்தவர்களுக்கும், மருத்துவ சிகிச்சை அளித்தனர். நாளை காலையில் மாவிளக்கும், மாலையில் பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், ஆகஸ்ட் 1ம் தேதி இரவு பரிவேட்டை, வானவேடிக்கையும் நடைபெற உள்ளது. இரண்டாம் தேதி மகா அபிஷேகம் மற்றும் மஞ்சள் நீராட்டும், மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கும், நான்காம் தேதி ஆடி அமாவாசை பூஜையும் நடைபெறுகிறது. ஐந்தாம் தேதி, 108 திருவிளக்கு பூஜையும், ஆறாம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், கோவில் தக்கார் மேனகா, உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி உள்பட ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.