பதிவு செய்த நாள்
30
ஜூலை
2024
10:07
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆகஸ்ட் 7 அன்று ஆடிப்பூர தேரோட்டம் நடக்கிறது.
108 வைணவ தலங்களில் ஒன்றானதும், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா மற்றும் திருத்தேரோட்ட வைபவம் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை கொடிபட்டம் மாட வீதிகள் மற்றும் ரத வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுரேஷ் பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோசத்துடன் ஆண்டாள், ரெங்க மன்னாரை தரிசித்தனர். விழாவில் சடகோபராமானுஜ ஜீயர் சுவாமிகள், ராம்கோ நிறுவன நிர்வாகிகள் நிர்மலா வெங்கட்ராமராஜா, ஸ்ரீ கண்டன் ராஜா, அறங்காவலர் நளாயினி, இணை ஆணையர் செல்லத்துரை, செயல் அலுவலர் லட்சுமணன், கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடக்கிறது. கோயில் ஆடிப்பூர பந்தலில் காலை 11:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகள், இசைக்கச்சேரிகள் நடக்கிறது. ஐந்தாம் திருநாளான ஆகஸ்ட் 3 காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருட சேவையும் நடக்கிறது. ஏழாம் திருநாளான ஆகஸ்ட் 5 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரெங்க மன்னார் சயன சேவையும், ஒன்பதாம் திருநாளான ஆகஸ்ட் 7 அன்று காலை 9:05 மணிக்கு திருத்தேராட்டமும், 12ம் திருநாளான ஆகஸ்ட் 10 அன்று மாலை 6:00 மணிக்கு புஷ்பயாகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
அதிகாரிகளுக்காக காத்திருப்பு; பக்தர்கள் அதிருப்தி.. கொடி பட்டம் சுற்றி வந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 8:10 மணிக்கு கொடியேற்ற பட்டர்கள் தயாராக இருந்தநிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டதால் 8:32 மணிக்குதான் கொடி பட்டம் ஏற்றப்பட்டது. இதனால் அங்கிருந்த கோயில் பட்டர்கள், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். 8:30 மணிக்கு தான் கொடி பட்டம் ஏற்றப்படுமென பட்டர்கள் தரப்பில் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக செயல் அலுவலர் லட்சுமணன் தெரிவித்தார்.