பதிவு செய்த நாள்
30
ஜூலை
2024
05:07
சூணாம்பேடு; சூணாம்பேடு அருகே வில்லிப்பாக்கம் கிராமத்தில், செல்லியம்மன், மாரியம்மன் மற்றும் கெங்கையம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமை, அனைத்து கோவில்களிலும், ஒரே சமயத்தில் ஆடித் திருவிழா விமரிசையாக நடக்கும். அதே போல, இந்த ஆண்டும் ஆடி திருவிழாவை விமரிசையாக நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, ஆடி திருவிழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மாரியம்மன் கோவிலில், இன்று மதியம் 2:30 மணிக்கு நடந்தது. பின், செல்லியம்மன் கோவிலில், கிராம பெண்கள் ஊருணி பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இரவு, மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில், செல்லியம்மன், மாரியம்மன் மற்றும் கெங்கையம்மன் மூவரும் வீதியுலா சென்றனர். இதில், வில்லிப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.