பதிவு செய்த நாள்
30
ஜூலை
2024
05:07
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், கோவில்பாளையத்தில் தளிகீஸ்வரர் கோவில் உள்ளது. பராமரிப்பு பணியின் போது, கல்வெட்டுகள் தெரிய வந்ததால், திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், கோவிலை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, ஒரு வட்டெழுத்து மற்றும் எட்டு தமிழ் கல்வெட்டுகளை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து, வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது: கொங்கு மண்டல வரலாற்றுக்கு புதிய வெளிச்சம் கொடுக்கும் வகையில், 1,100 ஆண்டு பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு, தளிகீஸ்வரர் கோவிலில் கிடைத்துள்ளது. கோவில் மண்டப சுவரில், 12 வரிகள் கொண்ட வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது. இது, 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, கொங்கு நாட்டின் மத்திய பகுதிகளை ஆட்சி செய்த இடைக்கால சேரர் கோக்கண்ட வீரநாராயணன் கல்வெட்டு என்பது தெரிந்தது. அதில், ‘தன்னால் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு சேதம் ஏற்படுத்துபவர் சந்ததி பாழ்படும்’ என்ற பொருளில் உள்ளது. கொங்கு சோழர் வீரராசேந்திரன், 1207- – 1256, விக்கிரம சோழன், 1273 – -1305 காலத்தில் உருவாக்கப்பட்ட, எட்டு கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், பெண் பக்தர் ஒருவர், நந்தா விளக்கு எரிக்க, கோவில் கருவூலமான பண்டாரத்துக்கு அச்சு காசு கொடுத்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எழுத்து சரியாத தெரியாததால், முழு தகவலையும் சேகரிக்க இயலவில்லை. அருகிலேயே, 1,000 ஆண்டுகள் பழமையான, வணிகர்கள் வழிபட்ட அய்யனார் சிற்பமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.