பதிவு செய்த நாள்
17
நவ
2012
10:11
சென்னை: சென்னை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தீ விபத்தை அடுத்து, அறநிலைய துறை, கோவில்களுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. வடிவுடையம்மன் கோவிலில், தீபாவளியன்று, ராஜகோபுரம் மீது பட்டாசு விழுந்தது. கீற்று சாரம் எரிந்து விழுந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
சுற்றறிக்கை: இதையடுத்து, அந்தந்த கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர், கோவில் பாதுகாப்பில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் குறித்து, அறநிலைய துறை, சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
கோவில், கோவில் சார்ந்த இடங்களில், தீப்பற்றும் கீற்று கொட்டகைகளோ, பந்தல்கள், அலங்கார பணிகளோ அமைக்க கூடாது. தகரம், இரும்புக் குழாய் உள்ளிட்டவை மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
திருப்பணி செய்யும் போது அமைக்கப்படும் சாரங்கள், தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்கப்பட வேண்டும்
*கோவில் வளாகத்தில், தீப்பெட்டி, சிகரெட் போன்ற பொருட்களை பக்தர்கள் எடுத்து வர தடை செய்ய வேண்டும்.
*கோவில் கட்டடங்களில் மின் இணைப்புகள் முறையாக உள்ளனவா என சரிபார்க்க வேண்டும்
* சூடம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். முடியாத போது, குறைந்த தரமான அளவு சூடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* தரமற்ற சூடம் விற்பனையை, தடை செய்ய வேண்டும்.
*மடைப்பள்ளி, பிரசாதம் தயாரிக்கும் இடங்கள், அன்னதான கூடங்கள் ஆகியவற்றில் எரிவாயு இணைப்புகள், கசிவுகள் இல்லாமல், கண்காணிக்கப்பட வேண்டும்.
*விறகு அடுப்பு உள்ள இடங்களில், உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும்.
* தீயணைப்பான்களை நிறுவி, இயங்கும் முறை குறித்து, சம்பந்தப்பட்டோருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
*புகை கண்டறியும் கருவியை பொருத்த வேண்டும்.
* அலுவலர்கள் அவ்வப்போது, கோவில்களை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்ற அனைத்து நிலை செயல் அலுவலர்கள், அறங்காவலர்கள், தக்கார் மற்றும் தற்காலிக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை:
மேலும், அனைத்து மண்டல இணை ஆணையர்கள், மாவட்ட நிலை உதவி ஆணையர்கள், ஒழுங்கு முறை கட்டளைகள் பின்பற்றப்படுகிறதா என, கண்காணித்து உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. களப்பணியில் உள்ள ஆய்வாளர்கள், கோவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஒழுங்கு நடவடிக்கைகளை செயல்படுத்த தவறும் அலுவலர்கள் மீது, கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், செயல்படுத்த தவறும் அதிகாரிகள் இழப்புக்கு பொறுப்பாகவும் நேரிடும் என, அறநிலைய துறை எச்சரித்து உள்ளது.