மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் நடைபெற்ற ஆடித்தபசு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இங்கு இந்தாண்டிற்கான விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது அம்மன் தினந்தோறும் வீதி உலா வந்தார். ஆடித்தபசு மண்டகப்படி நேற்று நடைபெற்றதை முன்னிட்டு வைகை ஆற்றுக்குள் தண்ணீர் செல்வதால் கோயில் முன் கால்பிரவு கிராமத்தார் சார்பில் மண்டகப்படி அமைக்கப்பட்டு அங்கு ஆனந்தவல்லி அம்மன் தபசு கோலத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் விருஷபரூடராக ஆனந்தவல்லி அம்மனுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமியை சுற்றி வலம் வந்தார். ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் சோமசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.