பதிவு செய்த நாள்
30
ஏப்
2026
04:04
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு வழிபாடு செய்யும் வழக்கம் காலம் காலமாக இருக்கிறது. சித்திரை மாதத்தில் சூரியனின் வெம்மை பகலில் மிகவும் கடுமையாக இருக்கும். அதனால் மக்கள் ஒன்று கூடி, கோடை காலம் முடிந்த பின் போதுமான மழை பெய்ய வேண்டி தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதற்கு ஒரு இரவு நேரத்தை தேர்ந்தெடுத்தனர். அந்த இரவில் வெளிச்சம் வேண்டும் என்பதால், முழுநிலவு நாளான சித்ரா பவுர்ணமியைத் தேர்ந்தெடுத்தனர். சித்ரா பவுர்ணமியன்று மட்டுமே நிலா தன் 16 கலைகளையும் பொழியும். இதில் அமிர்தம் இருப்பதாக ஐதீகம்.
இந்நாளில் நிலவொளியில் இருந்தால் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜோதிட ரீதியாகவும் இதற்கு ஒரு காரணம் உண்டு. சூரியன், சந்திரன் இருவரும் ஒருவருக்கொருவர் நேராக ஏழாம் பார்வையாக பவுர்ணமியன்று பார்த்துக் கொள்வர். அப்போது சந்திரனை வழிபட்டால் ஆரோக்கியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் பவுர்ணமி விரதம் இருப்பவர்களின் பிரச்னைகள் சீக்கிரம் தீர்ந்து விடும் என்பர். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர் உள்ளிட்ட மலைக்கோவில்களில் கிரிவலம் வருவதும் மனபலத்தை அதிகரிக்கத் தான். மதுரையில் அழகர் சித்ரா பவுர்ணமியன்று சூரிய உதயத்திற்கு முன்பாகவே வைகையில் இறங்கி விடுவார்.
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் வீட்டில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.
சித்ரகுப்தன் பூஜை : வீட்டை சுத்தம் செய்து, பூஜை அiறியல் விநாயகர் படத்தை வைத்து, அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். ஷசித்ரகுப்தா| என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். விரத நாளில் உப்பில்லாத உணவுகளையயே உண்ண வேண்டும். மாலையில் பவுர்ணமி உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பும், எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம். சித்ர குப்த விரத முறையில் உப்பு, பால், மற்றும் பால் சார்ந்த பொருட்களை மக்கள் தவிர்க்கின்றனர். காமதேனுவிடமிருந்து சித்ரகுப்தன் தோன்றியதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன. படையலுடன் எல்லாக் காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபராதனைக் காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. இதன்மூலம் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பி ரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.