பதிவு செய்த நாள்
01
மே
2026
06:05
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப்பட்டு உடுத்தி, கடலென திரண்ட பக்தர்களின், கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில் இன்று (1ம் தேதி) காலை எழுந்தருளினார்.
சைவமும், வைணவமும் இணையும் வகையில், மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் 28 ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடந்தது.
கள்ளழகர் புறப்பாடு: கள்ளழகர் தங்கக்குதிரையில் அழகர் கோவிலிலிருந்து மதுரை நோக்கி நேற்று முன்தினம் (29ம் தேதி) மாலை புறப்பட்டார். நேற்று மூன்றுமாவடியில் எதிர்சேவை முடிந்து, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று இரவு, பெருமாள் திருமஞ்சனமாகி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை சாற்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வைகையில் அழகர்: வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் கண்கொள்ளாக் காட்சி இன்று (மே 1ம் தேதி ) நடைபெற்றது. தங்கக்குதிரை வாகனத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர், பச்சைப் பட்டு உடுத்தி அதிகாலை 5.30 மணியளவில் வைகையில் எழுந்தருளினார். கோவிந்தா முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்றனர். முன்னதாக வெள்ளைப்பட்டு உடுத்தி வெள்ளிக்குதிரையில் வந்த வீரராகவ பெருமாள், அழகரை வரவேற்றார்.
சாப விமோசனம்: மே 2 காலை 11:30 மணிக்கு தேனுார் மண்டபத்தில் சேஷ வாகனத்திலும், மதியம் கருட வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருகிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மே 4 அதிகாலை பூப்பல்லக்கில் மீண்டும் கள்ளழகராக அழகர்கோவில் நோக்கி சுவாமி புறப்பட்டு, மே 5 காலை 10:40 மணி முதல் 11:10 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.