விழுப்புரம்; ப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் சிரவண தீபம் ஏற்றப்பட்டது. விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூரில் உள்ள கல்யாண தடை நீக்கும், கனகவல்லி நாயக சமேத லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு மூலவர் லக்ஷ்மி நாராயணபெருமாளுக்கும், உற்சவ பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. இதனை தொடர்ந்து மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கனகவல்லி தாயார் உடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோயில் உட்புறப்பாடு நடந்தது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் பெருமாள் தாயருடன் கருட கம்பம் அருகே எழுந்தருளினார். அங்கு, மாலை 5.30 மணிக்கு சிரவண தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.