பதிவு செய்த நாள்
19
நவ
2012
10:11
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், பிளாஸ்டிக் உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டும், இன்று வரை அமலுக்கு வராமல் உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள், அர்ச்சனை பொருட்களை, பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருவதால், கோவில்களில் பிளாஸ்டிக் குப்பை அதிகரிக்கின்றன.இதைத் தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க, இரண்டு மாதங்களுக்கு முன், இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது. பிளாஸ்டிக் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து கோவில்களிலும், அறிவிப்புப் பலகை வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை தடை உத்தரவு அமலுக்கு வரவில்லை. பெரும்பாலான கோவில்களில், பிளாஸ்டிக் பொருட்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர், கூறியதாவது: கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில், அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. முதலில் அவற்றிற்கு "தடை செய்ய வேண்டும். மேலும், கோவிலுக்குள் வழங்கப்படும் பிரசாதங்களும், பிளாஸ்டிக் தட்டுகளில் வழங்கப்படுகின்றன. இதையும் தடை செய்ய வேண்டும்.இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பதில் கூற மறுத்து விட்டனர்.