பதிவு செய்த நாள்
19
நவ
2012
10:11
நகரி: திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், 1.30 லட்சம் பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.நேற்று இரவு நிலவரப்படி, மேலும், 50 ஆயிரம் பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். இரவு நேரத்தில் நிலவும் பனி மற்றும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், பல ஆயிரம் பக்தர்கள், சாமி தரிசனத்திற்காக, வரிசையில் காத்து இருக்கின்றனர். கியூ காம்ப்ளக்சின், 31 வளாகங்களும், நிரம்பியுள்ள நிலையில், கோவிலுக்கு வெளியேயும், இலவச தரிசன வரிசை நீண்ட தூரம் நின்றிருந்தது. பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய, ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.இலவச தரிசனத்திற்கு, 16 மணி நேரமாகிறது; 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு, ஐந்து மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும் என, தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளுக்கும், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், விடுதி கிடைக்காத பக்தர்கள், சாலை ஓரங்களில் ஓய்வு எடுத்து வருகின்றனர். திருமலை கோவில் உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம், நேற்று முன் தினம் மட்டும், ஒரு நாள் வசூலாக, 2.26 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து உள்ளதாக, தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜ,ú தெரிவித்தார்.வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, பெங்களூருவை சேர்ந்த, கமல்கெடியா குடும்பத்தினர், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை, தேவஸ்தான போர்டு சேர்மனிடம், நேற்று முன் தினம் நன்கொடையாக வழங்கினர். இத்தொகையை, நித்ய அன்னதான திட்டத்திற்கு, டிபாசிட் செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.