பதிவு செய்த நாள்
02
செப்
2024
11:09
திருவள்ளூர்; பூந்தமல்லி பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் பொதுமக்கள் பலன்பெறும் வகையில், திருமழிசை எம்.எஸ்.எஸ்., மஹாலில், ‘காசி விஸ்வநாதர் சகஸ்ர கோடி லிங்கம் மற்றும் சொர்ணலிங்க தரிசனம்’ கடந்த மூன்று நாட்களாக நடந்தது. கடந்த 30ம் தேதி துவங்கிய சகஸ்ர கோடி லிங்க தரிசனம் நேற்று நிறைவடைந்தது. ஒரு லிங்கம் கண்ணாடியில் பிரதிபலித்து கோடி லிங்கமாக காட்சியளிப்பதை, பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் வழிபட்டு சென்றனர். இதில், சகல செல்வங்களையும் அள்ளித்தரும் மகளிர் பங்கேற்கும் விளக்கு தியானம், கடந்த 30ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் தேர்வு பயத்தை எவ்வாறு வெற்றி காண்பது என்பது குறித்து மாணவர்களுக்கு தியான நிகழ்ச்சியும், நேற்று மனக்கவலையிலிருந்து விடுபடுவது குறித்த தியான நிகழ்ச்சியும் நடந்தது. இதில், பிரம்மா குமாரிகள் காஞ்சிபுரம் சகோதரி பி.கு.அகிலா, ஸ்ரீபெரும்புதுார் சகோதரர் ஈஸ்வரன், பூந்தமல்லி சகோதரி பி.கு.பத்மா, வெள்ளவேடு காவல் ஆய்வாளர் ஐயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.