பதிவு செய்த நாள்
02
செப்
2024
03:09
மைசூரு: மைசூரு தசரா ஜம்பு சவாரியின் போது 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யுவுக்கு, நேற்று 520 கிலோ எடையுள்ள மணல் மூட்டை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. மைசூரு தசராவுக்கு முதல் கட்டமாக வந்த ஒன்பது யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஜம்பு சவாரியின் போது 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யுவுக்கு நேற்று, 520 கிலோ மணல் மூட்டை சுமக்கும் பயிற்சி நேற்று துவங்கியது. ஆஞ்சநேய சுவாமி கோவில் அருகில் உள்ள நுழைவு வாயில் வழியாக வெளியே வந்த அபிமன்யுவை பார்த்த பொது மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். பலர் தங்கள் மொபைல் போனில் கிளிக் செய்து கொண்டனர். அபிமன்யுவுடன் தனஞ்செயா, அர்ஜுனா, ஏகலைவா, பீமா, லட்சுமி, கோபி, ரோஹித் ஆகிய யானைகளும் அணிவகுத்து வந்தன. அரண்மனையில் இருந்து புறப்பட்ட யானைகள், கே.ஆர்., சதுக்கம், சாயாஜிராவ் சாலை வழியாக ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் பயணித்து, பன்னி மண்டபத்தை சென்றடைந்தது. முதன் முறையாக தசராவில் பங்கேற்ற ஏகலைவா யானையை பார்த்த குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அரண்மனை வளாகத்தில் உள்ள கோடி சோமேஸ்வரா கோவிலில் காலை 7:15 மணிக்கு மணல் மூட்டை ஏற்றும் முன், யானைகளுக்கு பாரம்பரிய பூஜை செய்யப்பட்டது. அரண்மனை அர்ச்சகர் பிரஹலாத ராவ், கணபதி, துர்கா கீர்த்தனைகள் வாசித்தார். யானைகளின் நெற்றில் சந்தனம், மஞ்சள் இடப்பட்டது. மிளகு, வெல்லம், கரும்பு, பஞ்ச கஜ்ஜா, இலை வைத்து பூஜை செய்தனர். பின், யானைகளுக்கு பஞ்ச கஜ்ஜா, கரும்பு, வெல்லம் வழங்கப்பட்டது.
வன அதிகாரி பிரபு கவுடா கூறியதாவது: அபிமன்யுக்கு 520 கிலோ மணல் மூட்டை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. வரும் நாட்களில் இதன் மணல் மூட்டையின் எடை அதிகரிக்கப்படும். துபாரே யானைகள் முகாமில் இருந்து அழைத்தப்பட்ட கஞ்சனுக்கு கால் வலி ஏற்பட்டுள்ளதால் இன்றைய (நேற்று) நடைபயிற்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், நலமாக இருக்கிறது. ஓய்வு தேவைப்படுவதால், பயிற்சியில் பங்கேற்கவில்லை. விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்ததும், மர அம்பாரி வைத்து பயிற்சி அளிக்கப்படும். அதன் பின், சத்தத்துக்கு அஞ்சாத வகையில், வெடிகுண்டு வெடிக்க செய்து, பயப்படாத வகையில் பயிற்சி அளிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். - பிரஹலாத் ராவ், அரண்மனை அர்ச்சகர்
அபிமன்யு மீது, 520 கிலோ எடை உள்ள மணல் மூட்டை வைத்து கட்டப்பட்டது. நகரின் சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்த யானைகள். இடம்: மைசூரு. யானைகள் சாலைகளில் நடைபயிற்சி செய்கின்றன. எனவே, சாலையில் இரும்பு கம்பிகள், கண்ணாடிகள், ஆபத்தான பொருட்கள் இருந்தால், பொது மக்கள் அதை அகற்றி, குப்பை தொட்டியில் போட்டுவிடுங்கள். யானைகள் சாலைகளில் நடைபயிற்சி செய்கின்றன. எனவே, சாலையில் இரும்பு கம்பிகள், கண்ணாடிகள், ஆபத்தான பொருட்கள் இருந்தால், பொது மக்கள் அதை அகற்றி, குப்பை தொட்டியில் போட்டுவிடுங்கள்.