பதிவு செய்த நாள்
11
செப்
2024
12:09
மாண்டியா; ஸ்ரீரங்கபட்டணா தசரா விழாவில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, ‘மகேந்திரா’ யானை, அம்பாரியை சுமக்க உள்ளது.
மைசூரு தசரா போன்று, மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவிலும் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கபட்டணா தசராவில், 2021ல், கோபால சுவாமி யானை பங்கேற்றது. 400 கிலோ எடை உள்ள மர அம்பாரியை சுமந்திருந்த யானை, வெடி சத்தத்தை கேட்டு மிரண்டு, பின்நோக்கி நகர்ந்து, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2022ல் மகேந்திரா யானை, அம்பாரியை சுமந்தது. எந்தவித தொந்தரவும் செய்யாமல், குறிப்பிட்ட நேரத்தில் ஊர்வலம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து 2023லும் மகேந்திராவே, அம்பாரியை சுமந்தது. நடப்பாண்டும் மகேந்திராவே, அம்பாரியை சுமக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கீரங்கூரில் உள்ள பன்னிமண்டபத்தில் துவங்கும் ஊர்வலம், மைசூரு – பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக பிரதான வீதிகளில் வலம் வந்து, ஸ்ரீரங்கபட்டணாவில் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் முன் முடிவடையும். 4 கி.மீ., துாரம் நடக்கும் இவ்விழாவில், ஒரு ஆண், ஒரு பெண் யானை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். நடப்பாண்டு யானைகள் முகாம்களில் இருந்து புறப்படுவதில் ஏற்பட்ட குழப்பத்தால், இரண்டாவது கட்டத்தில் தான், மகேந்திரா யானை மைசூருக்கு வந்து, தினமும் நடைபயிற்சியில்ஈடுபட்டுள்ளது. ஸ்ரீரங்கபட்டணா தசராவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மகேந்திரா அம்பாரியை சுமக்கிறது. மகேந்திரா, இயற்கையாகவே அமைதியான சுபாவம் கொண்டது. அவனுக்கு கொடுக்கும் பணியை கனகச்சிதமாக முடித்துவிடுவான். இம்முறை எந்த பெண் யானையை, அதனுடன் அனுப்புவது என்று முடிவாகவில்லை.