பதிவு செய்த நாள்
11
செப்
2024
12:09
பெங்களூரு; பெங்களூரில் மூன்று நாட்களில் 4.32 லட்சம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு உள்ளன.
கர்நாடகாவில் கடந்த 7ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வீடுகள், தெருக்கள், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து, மக்கள் வழிபட்டனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணால் ஆன, விநாயகர் சிலையை பயன்படுத்துங்கள் என, அரசு கேட்டுக் கொண்டது. பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட, எட்டு மண்டலங்களிலும் விநாயகர் சிலை வைத்து வழிபட, மாநகராட்சி அனுமதி வழங்கி இருந்தது. வணங்கிய பின், விநாயகர் சிலைகளை ஏரிகளில் கரைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அமைக்கும் தற்காலிக குளங்களில் கரைக்க வேண்டும் என, மாநகராட்சி கூறி இருந்தது. வீடுகளின் முன்பே டேங்கர் லாரியை கொண்டு, விநாயகர் சிலையை கரைக்கும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருந்தது. கடந்த 7, 8, 9ம் தேதிகளில் பெங்களூரில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 563 சிலைகள் கரைக்கப்பட்டு உள்ளதாக, நேற்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த மூன்று நாட்களும் விநாயகர் சிலைகளை வாகனங்களில் எடுத்துச் சென்று, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் மக்கள் கரைத்தனர்.