பதிவு செய்த நாள்
11
செப்
2024
12:09
பெங்களூரு; பனசங்கரியில் உள்ள புகழ்பெற்ற தேவகிரி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் திருமலைக்கு வழங்கும் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழாவுக்கு, ஹிந்து ஆத்யாத்மிகா சேவா அறக்கட்டளை சார்பில் திருக்குடை சமர்ப்பிக்கப்படுகிறது. நடப்பாண்டு, நான்காம் ஆண்டு விழாவுக்காக கடந்த 8ம் தேதி, பனசங்கரி 2வது ஸ்டேஜ் ஸ்ரீவரபிரதா தேவகிரி வெங்கடேச பெருமாள் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டன. இதற்காக திருக்குடைகள், பாதுகைகள், சங்கு, சக்கரம், சடாரி ஆகியவை பனசங்கரியின் முக்கிய வீதிகள் வழியே, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பஜனை பாடல்கள் பாடிய படி, கோலாட்டம் ஆடியபடி பெண்கள் வந்தனர். திருக்குடைகளுக்கு அறக்கட்டளை செயலர் வி.சீனிவாச மூர்த்தி இல்லத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உலர்ந்த பழங்கள், மஞ்சள், குங்குமம், கருடபுராணம் புத்தகம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது. அறக்கட்டளை கவுரவ தலைவர் எம்.ஜி.ஆர்., மணி, நாகை ஸ்ரீமகா வராஹி பீடத்தின் பூர்ணிமா சுகுமார், அறக்கட்டளை தலைவர் ஆர்.சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
19ல் பெங்களூரில் இருந்து புறப்பாடு; வரும் 19ம் தேதி காலை, பெங்களூரில் இருந்து புறப்படும் திருக்குடைகளுக்கு, 20ம் தேதி சேலத்திலும் 21ம் தேதி கரூரிலும் பூஜை நடத்தப்படுகிறது. வரும் 30ம் தேதி திருப்பதிக்கு குடைகள் சென்றடையும். அங்கு பரகால மடத்தில் பூஜை செய்யப்பட்டு, அக்., 1ம் தேதி வசந்த மண்டபத்தில், கோவில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும். வரும் 19ம் தேதி வரை, அறக்கட்டளை அலுவலகத்தில் திருக்குடைகள் வைக்கப்பட்டிருக்கும். மேலும் விபரங்களுக்கு சங்க செயலர் சீனிவாச மூர்த்தியின் 80508 38605 மொபைல் எண்ணில் கேட்டு அறியலாம்.