குன்றக்குடி முருகன் கோவில் யானை உயிரிழப்பு; பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2024 10:09
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதர் கோவில் யானை சுப்புலட்சுமி(54) நேற்று முன்தினம் இரவு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் யானைக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தது. பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுப்புலட்சுமி என்ற யானை உள்ளது. கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டின் அருகிலேயே யானை மண்டபம் உள்ளது. யானை மண்டபத்தில் மேற்கூரையான தகர சீட்டில், வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு கீற்று கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக, கீற்று கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயில் இருந்து தப்பிக்க, சுப்புலட்சுமி யானை தாமாகவே மண்டபத்திலிருந்து வெளியேறி வந்தது. கோயில் மண்டபத்தில் முன்பு தீக்காயத்துடன் யானை நிற்பதை பார்த்த, மக்கள் மற்றும் பணியாளர்கள் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த கால்நடை மருத்துவர்கள், யானை சுப்புலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. யானை உடலுக்கு பொன்னம்பல அடிகளார் மற்றும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர். கோயில் யானை உயிரிழந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.