பதிவு செய்த நாள்
23
செப்
2024
12:09
அமராவதி; திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரத்தில், ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு, 11 நாட்கள் பிராயச்சித்த தீட்சை என்ற உண்ணாவிரதத்தை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று துவக்கினார். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
குற்றச்சாட்டு; இங்கு திருப்பதி ஏழுமலையான் கோவில், உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், ‘ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தது’ என, முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரத்தில் ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு, 11 நாட்கள் பரிகார விரதம் இருக்கப் போவதாக, ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் அறிவித்திருந்தார். இதன்படி, குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், 11 நாட்கள் பிராயச்சித்த தீட்சை என்ற உண்ணாவிரதத்தை, பவன் பல்யாண் நேற்று துவக்கினார். விரதம் முடிந்த பின், அக்., 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து, மன்னிப்பு கோர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு, மகா சாந்தி யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மோடிக்கு ஜெகன் கடிதம்; லட்டு விவகாரம் தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதம்: பொய்யான குற்றச்சாட்டால் பக்தர்களின் மனம் புண்படும் என்பதை அறிந்தும் சந்திரபாபு நாயுடு பொய் பேசி உள்ளார். கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை அவர் புண்படுத்தி விட்டார். திருப்பதி கோவிலின் புனிதத்தைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், நீங்கள் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருப்பதி லட்டுவில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, குண்டூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டை நேற்று முற்றுகையிட்டு, பா.ஜ., இளைஞரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டது குறித்து விசாரிக்க உயர்மட்ட குழுவை அமைத்துள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
வாகனங்களில் ஜி.பி.எஸ்.,; லட்டுவில் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கும் வாகனங்களில், கே.எம்.எப்., எனப்படும் கர்நாடக பால் கூட்டமைப்பு, ஜி.பி.எஸ்., வசதியை நிறுவியுள்ளது. இது குறித்து கே.எம்.எப்., நிர்வாக இயக்குனர் எம்.கே.ஜெகதீஷ் கூறுகையில், “ஒரு மாதத்துக்கு முன் திருப்பதி தேவஸ்தானத்துக்கு, ‘நந்தினி’ நெய் வினியோகிக்க டெண்டர் கிடைத்தது. வாகனங்கள் எங்கு நிற்கின்றன என்பதைக் கண்டறிய, ஜி.பி.எஸ்., மற்றும் ஜியோ இருப்பிட சாதனங்களை நிறுவியுள்ளோம். இது கலப்படம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும்,” என்றார்.