பதிவு செய்த நாள்
25
செப்
2024
02:09
சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணை தலைவர் சுதா சேஷய்யன் பேசினார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன் தலைமையில், ‘இந்திய கலை மரபுகள்’ என்ற தலைப்பில், ஆய்வாளர்களுக்கான பயிலரங்கம் நேற்று துவங்கியது. அதில், ‘தமிழ்நாட்டு சமண ஓவியங்கள்’ என்ற நுாலை, நிறுவனத்தின் துணை தலைவர் சுதா சேஷய்யன் வெளியிட, முன்னாள் துணை தலைவர் தெ.ஞானசுந்தரம் பெற்றுக்கொண்டார். பின், சுதா சேஷய்யன் பேசுகையில், ‘‘நாடு முழுதும் பல பெயர்களில், கோலம் போடும் வழக்கம் உள்ளது. நம் பாரம்பரிய கலைகளான இசை, நடனம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட அனைத்துக்குமான இருப்பிடமாக கோவில்கள் இருந்தன. கோவில்களால் தான், அவை வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன,’’ என்றார். நிகழ்ச்சியில், பதிவாளர் புவனேஸ்வரி, பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் பங்கேற்றனர்.