பதிவு செய்த நாள்
25
செப்
2024
02:09
வயாலி காவல்,; திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்று, பெங்களூரு வயாலி காவலில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோவிலில் நேற்று துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்கின் கொழுப்பு சேர்ந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால், கோவிலின் புனிதத் தன்மையை மீட்டெடுக்க, மகா சாந்தி யாகம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதற்காக, கோவில் முழுதும் துாய்மை செய்யப்பட்டது. இது போன்று, பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவிலில், நேற்று துாய்மை பணி நடந்தது. கோவில் நிர்வாக குழுவினர், பக்தர்கள் இந்த பணியை மேற்கொண்டனர். இதனால், நேற்று ஒரு நாள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதுபற்றி, கோவில் நிர்வாக குழு உறுப்பினர் வசந்தாரெட்டி கூறியதாவது: ஆண்டுக்கு மூன்று முறை திருமஞ்சனம் என்ற கோவில் துாய்மை பணி நடத்தப்படுகிறது. அந்த வகையில், மங்கள பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் கோவிலில் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு வரும் 27ம் தேதி, உற்சவம் துவங்குகிறது. இதையொட்டி, திருமஞ்சனம் செய்யப்பட்டது. இந்த பணியை மேற்கொண்ட பாக்கியம் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.