பதிவு செய்த நாள்
26
செப்
2024
11:09
திருச்செந்துார்; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறவுள்ள கந்த சஷ்டி திருவிழாவில் தரிசன கட்டணம் ரூ.1,000 என சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கோயில் தக்கார், இணை ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு முழுதும் பல்வேறு திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா மிகவும் முக்கியமான திருவிழாவாகும். இத்திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வந்து கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருப்பது வழக்கம்.
ரூ.1000; கந்த சஷ்டி திருவிழா வருகிற நவ ., 2ம் தேதி துவங்கவுள்ளது. இக்கோயிலில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் ஆகியவை நடைமுறையில் உள்ளது. மூத்தக்குடிமக்களுக்காக ஒரு சிறப்பு இலவச தரிசன வரிசையும் உள்ளது.
அதிர்ச்சி; இந்நிலையில் நேற்று சமூக வலைதளங்களிலும், குறிப்பிட்ட சில ஊடகங்களிலும் கந்த சஷ்டி திருவிழாவின் போது சிறப்பு விரைவு தரிசனத்திற்காக ரூ.1,000 கட்டணம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அறிந்த பக்தர்கள் அதிர்ச்சி யடைந்தனர். இந்த திடீர் கட்டணம் அறிவிப்பு குறித்து பக்தர்களும், பொதுமக்களும் பல்வேறு கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அறிவிப்பு; திருச்செந்துார் கோயிலில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டணமில்லா முறை வரிசை மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசை ஆகியவற்றின் மூலம் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறின்றி கந்த சஷ்டி திருவிழா தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் முன்வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் கோயில் நலன் கருதி கடந்த ஆண்டை போல கந்த சஷ்டி திருவிழா காலத்திற்கு வரும் நவ. 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை 8 நாட்களுக்கு மட்டும் விரைவு தரிசன கட்டண சீட்டாக நபர் ஒன்றுக்கு ரூ.1,000 என தீர்மானிக்கப்படுவதாகவும், இதை நிர்ணயம் செய்வது தொடர்பாக பொதுமக்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் கோயில் அலுவலகத்திற்கு வரும் அக். 3ம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் வரப்பெறாத ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பாணை வெளியாகி சமூக வலை தலங்களில் உலா வருகிறது.
மறுப்பு; இந்த திடீர் கட்டண உயர்வு குறித்து கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்ததாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி திருவிழாவிற்காக ரூ.1000க்கு புதிதாக தரிசன கட்டணம் ஏதும் கோயில் நிர்வாகம் அறிவிக்கவில்லை. கட்டண உயர்வு என்பது நாங்களாக எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு இல்லாமல் கட்டண உயர்வு சாத்தியமில்லை. தற்போது சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் கந்த சஷ்டிக்கு ரு.1,000 சிறப்பு கட்டண தரிசனம் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் தவறானதாகும்.
கண்டனம்; இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறவுள்ள கந்த சஷ்டிக்கு தரிசன கட்டணம் ரூ.1,000 என உயர்த்த பட்டுள்ளதாக செய்தி வெளியானது கடும் அதிர்ச்சியை தருகிறது. கடந்த 45 நாட்களில் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம் மூலம் ரூ.5.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வழக்கமாகவே மாதாமாதம் ரூ. 5 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. எனவே கோயில் நிர்வாகம் பக்தர்களின் நலன் மீது அக்கறை கொண்டு வரக்கூடிய கந்த சஷ்டி காலத்தில் எவ்வித கட்டண உயர்வும் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.