பதிவு செய்த நாள்
26
செப்
2024
03:09
மைசூரு: தசரா விழாவை முன்னிட்டு, மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, சிம்மாசனம் ஜோடிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால், ஐந்து நாட்கள் அரண்மனைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைசூரு தசரா விழாவில், ஜம்பு சவாரி எப்படி பிரபலமோ, அதே அளவுக்கு தனியார் தர்பாரும் பிரபலம். மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து, பாரம்பரிய முறைப்படி தனியார் தர்பார் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, மைசூரு பா.ஜ., - எம்.பி.,யும், உடையார் மன்னர் வம்சத்தை சேர்ந்தவருமான யதுவீர் தனியார் தர்பார் நடத்தி வருகின்றார். இதற்காக, அரண்மனையின் அம்பா விலாஸ் தர்பார் மண்டபத்தில், 450 கிலோ எடை கொண்ட தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துவார். இந்தாண்டு, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தனியார் தர்பார் நடத்தப்படுகிறது. இதற்காக தங்க சிம்மாசனம், நாளை ஜோடிக்கப்படுவதாக அரண்மனை வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இதற்கிடையில், தசரா விழாவை ஒட்டி, ஐந்து நாட்களுக்கு அரண்மனைக்குள் நுழைய சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிம்மாசனம் ஜோடிப்பதால், நாளை காலை 10:00 முதல், பகல் 1:00 மணி வரையிலும்; தனியார் தர்பார் நடப்பதால், அக்., 3ம் தேதி காலை 10:00 முதல், மதியம் 2:00 மணி வரையிலும்; ஆயுத பூஜையை ஒட்டி, அக்., 11ம் தேதி முழு நாளும்; விஜயதசமியை ஒட்டி அக்., 12ம் தேதி முழு நாளும்; சிம்மாசனத்தை கழற்றி பிரித்து வைப்பதால், அக், 27ம் தேதி காலை 10:00 மணி முதல், பகல் 1:00 மணி வரையிலும்; அரண்மனைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.