திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2024 12:09
மதுரை; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு "அரோகரா கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரைதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலின் மலை உச்சியில் உள்ளது காசிவிசுவநாதர் கோவில். இங்கு மலைமேல் குமரர் சன்னதி வளாகத்தில் உள்ள வற்றாத தீர்த்த குளம் தெய்வீக புலவர் நக்கீரருக்காக முருகப் பெருமான், வேல் கொண்டு மலையின் பாறையில் உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. இதை நினைவூட்டும் வகையில் ஆண்டு தோறும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்க வேல் பல்லக்கில் வைத்து, மலை உச்சியில் உள்ள தீர்த்த குளத்திற்கு மேளதாளங்கள் முழங்கிட எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து, அங்கு வற்றாத தீர்த்த குளத்தில் மகா அபிஷேகமும், அதனைடுத்து குமரர் சன்னதியில் பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று "அரோகரா கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கதம்பசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் கோவில் மலையை குடைந்து கருவறை அமைந்துள்ளதால் இங்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை. முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்குத்தான் அனைத்து வகை அபிஷேகமும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.