பதிவு செய்த நாள்
27
செப்
2024
04:09
சாயல்குடி; சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில் அரக்காசு அம்மா தர்காவில் கந்தூரி விழா நடந்தது.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது வெள்ளிக்கிழமையில் ஒவ்வொரு ஆண்டும் அரக்காசு அம்மா தர்காவில் கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இன்று காலை 7:00 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் மற்றும் சேவல்கள் நேர்த்திக்கடன் பக்தர்களால் விடப்பட்டது. ஆட்டுக்கிடாய்கள் மற்றும் சேவல்கள் பலியிடப்பட்டு தனித்தனி அண்டாக்களில் சமையல் செய்யப்பட்டு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணி முதல் இரவு 11:30 மணி வரை தொடர்ச்சியாக அன்னதானம் நடைபெறுகிறது. காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சாயல்குடி பெரிய பள்ளிவாசல் ஆலீம்சா பஷீர் அகமது, முகம்மது யூனுஸ் கான் ஆகியோர் யாசின் மற்றும் உலக நன்மைக்கான பாத்தியா ஓதினர். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அரக்காசு அம்மா புனித மக்பாராவில் பச்சை போர்வை போர்த்தப்பட்டு, மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டு, வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு பொட்டுக்கடலை, சர்க்கரை, பேரிச்சம்பழம் கலந்து பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாக்குழுவினர் கூறியதாவது: கடந்த ஐந்து தலை முறைகளாக அரக்காசு அம்மாவிற்கு வழிபாடு செய்து வருகிறோம். ஹிந்து, முஸ்லீம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இவ்விழா வருடம் ஒருமுறை கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் வைக்கக்கூடிய கோரிக்கை நிறைவேறியவுடன் நேர்த்திக்கடனாக விடக்கூடிய ஆட்டு கிடாய்கள் மற்றும் சேவல்கள் மூலமாக அசைவ அன்னதானம் வழங்கப்படுகிறது. பாரம்பரிய மிக்க விழாவை கொண்டாடுவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். இரவில் வள்ளி திருமணம் நாடகம் நடக்கிறது. ஏற்பாடுகளை பிள்ளையார் குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.