பதிவு செய்த நாள்
30
செப்
2024
01:09
சாத்தான்குளம்; சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் கோயில் திருவிழாவில் அம்மன் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. சாத்தான்குளம் 450 குடும்ப இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புளியடி மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மகாகணபதி ஹோமத்துடன் புளியடி மாரியம்மனுக்கு லட்சார்ச்சனை 2 நாட்கள் நடைபெற்றது. 1ம் திருவிழா அன்று காலை பொன்னி யானை கொடி பட்டம் சுமந்து ரதவீதி சுற்றி வந்து அம்மனுக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து செல்வவிநாயகர், தர்ம பெருமாள், வீரசூர ஆஞ்சநேயர், நாகவல்லி தாயார், சுடலைஆண்டவர், புளியடி மாரியம்மன், புளியடி முத்தாரம்மன், துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பட்டு சாத்தி சிறப்பு பூஜை, மாலை மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து கருட வாகனத்தில் புளியடி தர்மபெருமாள் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா, பக்தர்கள் நேர்ச்சை பால்குடம் சமர்ப்பித்தல், மஞ்சள் பெட்டி எடுத்து ரதவீதி வருதல், அம்மன் மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி சமர்ப்பணம், பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக வந்து புளியடி மாரியம்மனுக்கு சமர்ப்பித்தல், புளியடி தேவிமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம், மாரியம்மன் சிங்க வாகனத்தில் புஷ்ப அலங்காரத்துடன் வீதி உலா வருதல் நடைபெற்றது. 8ம் நாள் காலை சிறப்பு பூஜை, மாலை 6மணிக்கு மாரியம்மன் மற்றும் முத்தாரம்மன் மலர் அலங்காரத்துடன் ஊஞ்சல் உற்சவம், அம்மன் அக்னி சட்டி ஏந்தி வந்து சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வீபூதி பிரசாதம் வழங்கினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். 9ம் நாள் இரவு 7மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் டிரஸ்டி குழுத் தலைவர் மகேஸ்வரன் தலைமையில் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.