பதிவு செய்த நாள்
08
அக்
2024
11:10
மதுரை; தினமும் காலை எழுந்தவுடன் நான்கு பேரை வணங்க வேண்டும் என எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் பேசினார்.
மதுரை சொக்கிகுளத்திலுள்ள காஞ்சி மடத்தில் அனுஷ வைபவம் நடந்தது. விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் குருமகிமை எனும் தலைப்பில் பேசியது: தினமும் கண்விழிக்கையில் கிருஷ்ணன், தர்மர், நளன், சீதை ஆகியோரை வணங்கி அந்த நாளை துவங்க வேண்டும். தமயந்தியை மணந்தது முதல் சனிகிரகத்தின் பிடிக்குள் சிக்கி நளன் பட்ட பாடுகளும், அந்த நிலையிலும் அவன் பொறுமையும், வைராக்கியமும், எவ்வளவுதுன்பம் வந்தபோதும் தர்மர் எப்படி பொறுமையுடன் இருந்தார் என்பதும், இளவரசியாக இருந்தும், ராமனை மணந்து கானகம் சென்று துன்பங்களை அனுபவித்தும் மன உறுதியுடன் சீதை இருந்ததும், மனிதனுக்கு மனிதனாய், தேவனுக்கு தேவனாய் திகழ்ந்த கிருஷ்ணனையும் நினைக்கும்போது நம்மனதுள் பெரும் திடமும், தெளிவும் பிறக்கும். இவர்களை மனதார வணங்கிய நிலையில் அன்றைய பொழுதை தொடங்குபவர்களுக்கு காலத்தால் எல்லா நலன்களும் உண்டாகும் என்று மஹா பெரியவர் கூறியுள்ளார். இவ்வாறு இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார். நிகழ்ச்சிக்கு மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்ரமண்யன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வெங்கடேசன், ரமணி, ஸ்ரீ குமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மடத்தில் காமாட்சி அம்மனுக்கு வெள்ளி ஊஞ்சலும், மஹா பெரியவர் விக்ரகத்திற்க அபயஹஸ்தமும் வழங்கப்பட்டு தொழிலதிபர் பரத்வாஜ் துவக்கி வைத்தார்.