பதிவு செய்த நாள்
22
அக்
2024
05:10
நடுவீரப்பட்டு; பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க அறையை தொல்லியல் துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான சொக்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணி நடந்து வருகிறது. இப்பணியின்போது, சுப்ரமணியர் சன்னதியில் உள்ள அர்த்தமண்டபத்தில் தரைக்கு கருங்கற்கள் பதிக்கும் பணி கடந்த 20ம் தேதி துவங்கியது. இதற்கு பள்ளம் தோண்டியபோது, சுரங்க அறை காணப்பட்டது.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்று காலை கடலுார் அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் பரணிதரன் உத்திரவின் பேரில், கடலுார் மண்டல ஸ்தபதி சக்திவேல், தொல்லியல் துறை ஆலோசகர் இளஞ்செழியன் ஆகியோர் கோவிலில் சுரங்க அறையை ஆய்வு செய்தனர். ஆய்வில், சுரங்க அறை 5 அடி உயரம், 11 அடி நீளம், 6 அடி அகலம் உள்ளதாக இருந்தது. இந்த அறை முழுவதும் களிமண்ணால் கட்டப்பட்டுள்ளது. எந்த பொருளும் அங்கு இல்லை. அதை தொடர்ந்து, சுரங்க அறையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டு சென்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் ‘கடந்த காலங்களில் சாமி சிலைகளை பாதுகாக்க இதுபோன்ற அறைகள் அமைக்கப்படுவது வழக்கம். பல கோவில்களில் ரகசிய அறைகள் இருந்து வருகிறது. அதுபோல் இந்த கோவிலிலும் சிலைகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருக்கலாம்’ என, தெரிவித்தனர்.