கடந்த ஆண்டில் சேதமடைந்த கோயில் சுற்றுச்சுவரை சீரமைக்காமல் அலட்சியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2024 05:10
தொண்டி; தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயில் சுற்றுச்சுவர் கடந்த ஆண்டு பெய்த பருவமழையில் சேதமடைந்தது. 11 மாதங்கள் ஆகியும் சீரமைக்காமல் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். தொண்டியில் மன்னர்கள் காலத்தில் கட்டபட்ட பழமை வாய்ந்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உந்திபூத்த பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜர் வழிபட்ட தலம். இங்கு கருடர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆதிேஷசன், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இக்கோயில் சுற்றுச்சுவர் செங்கல், மண்ணால் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவ.4ல் பலத்த மழைக்கு கோயில் வடக்கு பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். 11 மாதங்கள் ஆகியும் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பக்தர்கள் கூறுகையில், கோயிலுக்கு நிலம் மற்றும் கடை வாடகையாக ரூ.20 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இடிந்து விழுந்த சுவரைக்கூட சீரமைக்கவில்லை. தற்போது பருவமழை துவங்கியுள்ளதால் அந்த சுவர் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஹிந்து கோயில்களில் இருந்து வருமானத்தை மட்டும் ஹிந்து அறநிலையத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கோயிலை பராமரிக்க தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. கோயிலின் தென் பகுதியிலும் விரிசல் உள்ளது. கோயில் பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே ஹிந்து சமய அறநிலையத்துறையினர் உடனடியாக கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.