பதிவு செய்த நாள்
23
அக்
2024
10:10
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம், 50, தனது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக, ஜே.சி.பி., இயந்திரத்தால் நிலத்தில் வரப்பு கட்டியுள்ளார். அப்போது, லிங்கம் போன்ற கல் சிலை ஒன்று இருப்பது தெரியவரவே, வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தார். வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மண்ணுக்குள் புதைந்திருந்த சிவலிங்கத்தை வெளியே எடுத்தனர். பல நுாற்றாண்டுகள் பழமையான, ஒரு டன் எடை கொண்ட சிவலிங்கத்தை, வருவாய் துறையினர், புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு துாக்கி சென்றனர். சிவலிங்கத்தை ஆர்.டி.ஒ., ஐஸ்வர்யா, தாசில்தார் பரணி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ‘சிவலிங்கத்தை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும்; நாங்கள் கோவில் கட்டி வழிபாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஆர்.டி.ஒ.,விடம் ஊராட்சி தலைவர் சதீஷ் கோரிக்கை விடுத்தார்.