பதிவு செய்த நாள்
24
அக்
2024
10:10
அன்னூர்; 150 ஆண்டு பழமையான மதுர காளியம்மன் கோவில் திருப்பணி வேகமாக நடைபெறுகிறது. அன்னூர் அருகே லக்கேபாளையம் கோவில் பாளையத்தில், 150 ஆண்டு பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், பூச்சாட்டு திருவிழாவிலும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களிலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடுவர். பழமையான இக்கோவிலில் புதிய கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி முழுவதும் கருங்கற்களால் மகா மண்டபம், கருவறை, கோபுரம், விநாயகர் சன்னதி மற்றும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி பல கோடி ரூபாய் செலவில், ஒன்றரை ஆண்டாக நடைபெற்று வருகிறது. கோவில் பிரகாரத்தில் பரிவார தெய்வங்கள், சிற்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருச்சியை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து கோவில் கமிட்டியினர் கூறுகையில், அன்னூர், கோவை, காரமடை, புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கும், ஈஞ்ச குலத்தாருக்கும் குலதெய்வமாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். திருப்பணிகளை முடித்து வருகிற மே மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றனர்.