பதிவு செய்த நாள்
24
அக்
2024
10:10
முல்பாகல்; முல்பாகல் அருகே உள்ள ஸ்ரீ ஆவணி சிருங்கேரி மடத்தின் புதிய மடாதிபதியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீஅத்வைதானந்தா பாரதி சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்கான விழா முல்பாகல், ஆவணியில் உள்ள சிருங்கேரி மடத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலையில், குரு பிரார்த்தனை, சங்கல்பம், கணபதி பூஜை, புண்யாக வாசனம், நாந்தி, கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. மாலையில், சிவகங்காவிலுள்ள, ஸ்ரீசிருங்கேரி சிவகங்கா மடத்தின் புருஷோத்தம பாரதி சுவாமிகள் முன்னிலையில், சிருங்கேரி அனந்தஸ்ரீ விபூஷித விதுஷேகர பாரதி மஹா சுவாமிகளுக்கு ஆவணி மடத்தின் அறக்கட்டளை சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறப்பு ஹோமங்கள்; நேற்று காலையில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பூர்ணாஹுதி நடந்தது. தொடர்ந்து மந்திரங்கள் ஓத, ஆவணி சிருங்கேரி மடத்தின், புதிய மடாதிபதியாக அத்வைதானந்த பாரதி சுவாமிக்கு சிருங்கேரி அனந்தஸ்ரீ விபூஷித விதுஷேகர பாரதி மஹா சுவாமிகள், முத்துமணி மாலை அணிவித்து, ஸ்வர்ணாபிஷேகம், ரத்னாபிஷேகம், தீர்த்த ஸ்நானம் நடத்தி, பட்டாபிஷேகம் செய்து வைத்தார். இதன் பின், ஸ்ரீஸ்ரீஸ்ரீ விதுஷேகர பாரதி மஹா சுவாமிகளுக்கு, புதிய மடாதிபதி பாதபூஜை செய்தார்.
சிவகங்கா மடாதிபதி பக்தர்களுக்கு வழங்கிய அருளாசியில் கூறியதாவது: தர்ம காரியத்தில் குரு பூஜை முக்கியமாகும். மனநிம்மதிக்கு குரு ஆசி தேவை. வாழும் போதே சுக சாந்தி கிடைக்க வேண்டும். அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பகவான் கிருபை தேவை. இதைப் பெற்றவர்கள் சொர்க்க லோகம் பெறுவர். ஞான மோட்சம் கிடைப்பதே குருக்களின் அனுகிரஹமாகும்.
மனது துாய்மை; அனைத்து பக்தர்களும், தர்மகாரியங்களில் ஈடுபட வேண்டும். ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும். உடலை துாய்மை செய்வது போல, மனதை துாய்மையாக வைத்துக் கொள்ள இறைபக்தி தேவை. சனாதனத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஹிந்து தர்மம் என்றுமே நிலைத்து நிற்கும். இவ்வாறு அருளாசியில் குறிப்பிட்டார். பட்டாபிஷேக சமிதி தலைவர் நீதிபதி குமார், துணைத் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, நிர்வாக அதிகாரி டி.எஸ்.சுதீந்திரா தலைமையில் குழுவினர் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர். சிக்கபல்லாப்பூர் தொகுதி பா.ஜ., – எம்.பி., சுதாகர், எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா, முன்னாள் எம்.எல்.ஏ., அரவிந்த் லிம்பாவளி, கர்நாடக மாநில பிராமணர் மஹாசபை நிர்வாகிகள், பெங்களூரு, மங்களூரு, ஷிவமொக்கா உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள சிருங்கேரி மடத்தினர் வந்திருந்தனர். இன்றும் மடத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.