பதிவு செய்த நாள்
24
அக்
2024
11:10
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, பேரிகை பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கணிமங்கலம் என்ற ஊரில், திருமலைக்கோவில் மைதானத்தில், மாடு கட்டி வைக்க பயன்படுத்தப்பட்ட, 750 ஆண்டு பழமையான கல்வெட்டைக் கண்டுபிடித்தனர். கல்வெட்டை, ஓய்வுபெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் படித்து கூறியதாவது: பூர்வாதராயர்கள் என்னும் குறுநிலத் தலைவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற சிற்றரச பரம்பரையினர். இவர்கள் பிற்கால சோழர்கள் காலத்தில், சிறு தலைவர்களாய் இருந்து ஹொய்சாளர்களின் காலத்தில், ஓசூரைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆளும் மகாமண்டலீஸ்வரர்களாக இருந்தனர். சின்னக்கொத்துார், மேல்சூடாபுரம், பேரிகை போன்ற இடங்களில் உள்ள கோவில்களை கட்டி, பல்வேறு தானங்களை வழங்கினர். இவர்களில் ஒரு முக்கிய தலைவர் பூமிநாயக்கன் என்பவரின் கல்வெட்டை தான், கணிமங்கலத்தில் கண்டறிந்துள்ளோம். இவர், இப்பகுதியின் மகாமண்டலீஸ்வரனாக இருந்தபோது, கணிமங்கலம் என்ற ஊருக்கு, பூமிநாயக்க சதுர்வேதிமங்கலம் என்ற தன் பெயரை வைத்து, அதை பிராமணர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியை, இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்வாறு கூறினார்.