பதிவு செய்த நாள்
24
அக்
2024
12:10
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பக்தர்களுக்கு நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கோவில் சுற்றுப்புறம் கவர்ச்சிகரமானதாகவும், ஆன்மீகமாகவும் மாற்றப்படும் என எம்எல்ஏ. தெரிவித்தார். ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் சன்னிதி தெருவில் சுமார் 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன கழிப்பறைகளையும், சுற்றுலா பேருந்து நிலைய வளாகத்தில் பத்து லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளையும் எம்எல்ஏ பொஜ்ஜல. சுதிர் ரெட்டி திறந்து வைத்துப் பேசினார்.
அவர் கூறியதாவது; புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறைகளை ஆய்வு செய்து நவீனப்படுத்த தேவஸ்தான பொறியியல் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தனியார் பங்களிப்புடன் நன்கு பராமரிக்க வேண்டும் என்றும், ஸ்ரீகாளஹஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற முக்கிய மையங்களில் நவீன கழிப்பறைகள், குளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தேவஸ்தான வளைவு (ஆர்ச்சி) யில் இருந்து தேவஸ்தானம் வரை நடைபாதை அமைத்து, பசுமையை மேம்படுத்தி, நவீன மின்விளக்கு அமைப்புடன் கவர்ச்சிகரமானதாக வரும் பிப்ரவரி மாதத்திற்குள் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானம் சுற்றுப்புறம் மாற்றப்படும் என்றும் வார்த்தைகளால் பேசுவதை விட கைகளால் செய்து ஆன்மீகத்துடன் கண்கள் கவரும் வகையில் அனைத்தும் செய்யப்படும். வரும் கார்த்திகை மாதம் கார்த்திகை தீபங்களை பக்தர்கள் ஏற்றி வைக்க சொர்ணமுகி ஆற்றங்கரையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். சொர்ணமுகி ஆற்றின் ஆரத்தியை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான பொறியியல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.