கடலாடி; கடலாயில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு வருடாபிஷேக விழாவும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 ஆம் ஆண்டு குருபூஜை விழா கடலாடி நகர் தேவர் மகா சபையின் 36 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா உள்ளிட்டவைகள் நடந்தது. கடந்த அக்., 18 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஒவ்வொரு நாளும் இரவில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், பல்சுவை கலை நிகழ்ச்சி, வள்ளி திருமண நாடகம் உள்ளிட்டவைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலை அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. நாளை காலை பால்குடம், பூத்தட்டு ஊர்வலம், அக்னி சட்டி, நகர் வலம் விளையாட்டு போட்டிகள் மற்றும் தேவருக்கு மகா அபிஷேகம் தீபாராதனை உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது. வருகிற அக்., 27 அன்று பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு உள்ளிட்ட பிரிவுகளில் பங்கேற்கும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கடலாடி நகர் தேவர் மகாசபை மற்றும் நகர் தேவர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.