பதிவு செய்த நாள்
26
அக்
2024
12:10
கூடலூர்; கூடலூர் அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும் நெற்கதிர் அறுவடை திருவிழா விமர்சியாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பணியர் இன பழங்குடி மக்கள் சார்பில், நெற்பயிர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலமுடன் இருக்கவும், பேரிடர் மற்றும் வன விலங்குகளால் நெற் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, நெல் அறுவடைக்கு முன்பாக பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும் கதிர் அறுவடை திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பத்தாம் நாள் கொண்டாடி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான திருவிழா இன்று நடந்தது. நம்பலக்கோட்டை வேட்டைக்கொருமகன கோவில் காலை சிறப்பு பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற பழங்குடி மக்கள், பின் ஊர்வலமாக புத்தூர்வயல் வந்தனர். அங்கு, கதிர் அறுவடைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பாரம்பரிய பழங்குடியினர் இசையுடன் விளக்கேற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து, பூ புத்தரி திருவிழா நடந்தது. இதற்காக பத்து நாட்கள் விரதம் இருந்து மூன்று பழங்குடியினர் ஆண்கள் நெற்கதிர் அறுவடை செய்து கட்டுகளாக கட்டி, ஊர்வலமாக வட்டைப்பாறை பகவதி அம்மன் கோயில் எடுத்து சென்றனர். அங்கு நெற் கதிருக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து, பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன், பழங்குடி பெண்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. அங்கிருந்து, நெற்கதிர் கட்டுகள் மங்குழி பகவதி அம்மன் கோவில், புத்தூர்வயல் விஷ்ணு கோவில், தேவாலா வேட்டைக்கொருமகன் கோவில் மற்றும் நம்பாலக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோவிலுக்கும், எடுத்து சென்றனர். கோயில்களில், நெற்கதிர்கருக்கு சிறப்பு பூஜை செய்து, விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கினர். பழங்குடி மக்களின் பாரம்பரியமான விழாவில் அனைத்து தரப்பு மக்களும் திரளாக பங்கேற்றனர்.