காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, 2018ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், வருடாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆறாம் ஆண்டு வருடாபிஷேக பெருவிழா, இன்று காலை 8:00 மணிக்கு கோபூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து சங்காபிஷேகமும், 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜை, யாக வேள்வி, காலை 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, வருடாபிஷேகம், மஹா தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு அகத்தீஸ்வரருக்கும், அறம்வளர்நாயகிக்கும் திருக்கல்யாண மஹோற்சவம் நடக்கிறது.