பதிவு செய்த நாள்
05
டிச
2024
10:12
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்கியது. அப்போது, பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.முதல் நாள் இரவு உற்சவத்தில் அதிகார நந்தி வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன், முதல் நாள் விழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள், தங்ககொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க காலை, 6:25 மணிக்கு, 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கோவில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுவாமி உலா: தொடர்ந்து முதல் நாள் விழாவில், காலை 10:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மர விமான வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வெள்ளி ஆச்சி விமானத்திலும், பராசக்தி அம்மன் கண்ணாடி விமானத்திலும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில் விநாயகர் மர மூஷிகம் வாகனம், வள்ளி தெய்வானை சமேத சுப்பரமணியர் மர மயில் வாகனம், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசஸ்வரர் வெள்ளி அதிகார நந்தி, பராசக்தி அம்மன் வெள்ளி சிம்ம வாகனம், சண்டிகேஸ்வரர் புலிக்குட்டி வாகனத்திலும், வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பக்தர்கள் விரதம்: வரும் 10ல், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், 13 அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீப தரிசனம், 21, தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மகா தீபம், 11 நாட்களுக்கு எரியும். தீப விழாவை முன்னிட்டு, பக்தர்கள் மாலை அணியத்தொடங்கி உள்ளனர். இவர்கள், விழா நாட்களில் விரதமிருந்து மகா தீபத்தை கண்டு வழிபடுவர். தீப திருவிழா தொடங்கியுள்ள நிலையில் கோவில் வளாகம், நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் ஆவின் நெய், 34.50 லட்சம் ரூபாய் மதீப்பீட்டில், 4,500 லிட்டரை, கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளது.