திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2025 11:01
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 3:00 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து நித்திய பூஜை, 4:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, 4:45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீசபெருமாள், வைரகல் பதித்த பாண்டியன் கிரீடம், செண்டை பேரண்ட்டை பட்சி பதக்கம், ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்த மாலை சாத்தி, செங்கோல் ஏந்தி தங்கத் தோளுக்கினியாளில் ஆஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, ராமானுஜர் சன்னதியை வந்தடைந்தார். அங்கு விசேஷ ஆராதனை நடந்தது. சரியாக 5:30 மணிக்கு பரமதவாசல் திறக்கப்பட்டு, பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீசபெருமாள் எழுந்தருள, நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவைசாதித்தார். தொடர்ந்து திருவாய்மொழி துவக்கம், சுவாமி ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருள பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமியை வழிபட்டு சென்றனர். ஜீயர் ஸ்ரீதேகளீசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜன்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.