பதிவு செய்த நாள்
21
பிப்
2025
11:02
திருப்புவனம்; தென்மாவட்டங்களில் மாரியம்மன் கோயில்களில் பங்குனி திருவிழாக்கள் தொடங்க உள்ளதை அடுத்து திருப்புவனத்தில் அக்னிசட்டிகள் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. மாசி, பங்குனி மாதங்களில் தென்மாவட்டங்களில் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும், திருப்புவனம், தாயமங்கலம், இருக்கன்குடி உள்ளிட்ட ஊர்களில் அம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் விரதமிருந்து அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பொம்மை, பாதம், நாகம் உள்ளிட்டவைகளை சுமந்து வந்து செலுத்துவது வழக்கம். இதற்காக திருப்புவனம் புதூர் வேளார் தெருவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அக்னிசட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் கூறுகையில்: சுற்றுப்புற சூழலை பாதிக்காத பச்சை மண் சட்டிகள் இவைகள், தண்ணீரில் போட்டாலும் எளிதில் கரைந்து விடும், மண்ணை எந்த விதத்திலும் பாதிக்காது நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 சட்டிகள் வரை தயாரிக்கிறோம், பின் அதற்கு வர்ணம் பூசி அம்மன் படங்களை வரைந்து வெயிலில் காயவைத்து விற்பனை செய்கிறோம், அக்னி சட்டிகள் 500 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் கண்பானை, பொம்மை உள்ளிட்டவைகளும் ரூ300 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யகிறோம், என்றனர்.