அவிநாசி; சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவிநாசி தாலுகா, சேவூரில் உள்ள அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. கொங்கேழு சிவ ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும் போற்றப்படும் சேவூரில் எழுந்தருளியுள்ள அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் 6ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரம் பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இதற்காக கோவிலில் சிறப்பு ஹோமம், வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிரேன் உதவியுடன் கொடிமரம் நிறுத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சேவூர் முத்துக்குமாரசுவாமி அன்னதான குழுவினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.